கனடாவின் எட்மன்டன் நகரில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீகுமார் (44), சுமார் 8 மணி நேரம் சிகிச்சையின்றி காத்திருக்க வைக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவர், நண்பகல் 12.20 மணியளவில் கிரே நன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர வலி இருந்தபோதிலும், ‘டைலனால்’ என்ற சாதாரண வலி நிவாரணி மாத்திரை மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அவரது ரத்த அழுத்தம் 210 என்ற அபாய நிலைக்கு உயர்ந்தும் செவிலியர்கள் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எட்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு இரவு 8.50 மணியளவில் சிகிச்சைக்காக உள்ளே அழைக்கப்பட்ட சில நொடிகளிலேயே, அவர் தனது தந்தையின் முன்னிலையிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பிரசாந்தின் மனைவி, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே தனது கணவரின் மரணத்திற்குத் தார்மீகக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். “அப்பா, என்னால் இந்த வலியைத் தாங்க முடியவில்லை” என்று அவர் கடைசியாகக் கூறியதாக அவரது தந்தை குமார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
<a href=”http://

“>
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடிமகன் என்பதால், இந்த விவகாரத்தில் கனடா அரசு உரியப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மூன்று குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் சென்றுள்ள பிரசாந்தின் மரணம், கனடாவின் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக அங்குள்ள இந்தியச் சமூகம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.