
மத்திய அரசு பாரதியார் இலக்கிய படைப்புகளை தொகுத்த சீனி விஸ்வநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வானவில் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, பாரதியார் ஒரு மிகப்பெரிய கவிஞராக இருக்கும் நிலையில் சுதந்திர போராட்டத்தில் அவருடைய பங்கு என்பது அளப்பரியது. நான் ராஜ் பவனுக்கு முதன்முதலாக வந்த போது எத்தனையோ தலைவர்கள் சிலை இருந்த போதிலும், பாரதியாரின் சிலை மட்டும் இல்லாததால் முதன்முதலாக அந்த சிலையை திறந்தோம். தமிழ் ஒரு பழமையான மொழி மட்டுமின்றி சொல் மற்றும் பேச்சு நடையில் ஆங்கிலத்தை விட சிறந்த மொழி. தாய்மொழி தான் ஒரு மனிதனை பிரகடனப்படுத்துகிறது.
ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் தமிழ் மொழியை அடக்கி ஆங்கிலத்தை பிரதானப்படுத்திய போதிலும் தன்னுடைய அடையாளத்தை தமிழ் மொழி இழக்க வில்லை. ஆனால் இந்த பெருமைகளை நாம் இப்போதும் பின்பற்றி தொடர்கிறோமா.? பாரதியார் போன்ற ஒப்பற்ற தலைவர்களின் பெருமையை பேசுவதையே கூச்சமாக நினைக்கிறோம். கம்பர் மற்றும் வால்மீகி, ஆகியோர் பற்றி நாம் பேசும்போது அவர்களை போற்றுகிறோமா.? தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழர்களுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் எந்தவித சேவையும் செய்யப்படவில்லை. இதுதான் உண்மை. தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் எதுவும் செய்யாத போது தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று பேச மட்டும் செய்கிறார்கள். மேலும் இது எப்படி நியாயமாகும் என்று கூறினார்.