தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகல் பகுதியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் மற்றும் அவரது ஆறு வயது மகன் சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் டிப்பர் லாரி மோதியது.

இந்த மோசமான விபத்தில், பள்ளி மாணவனான அபிமன்ஷு ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது தாய் அதிர்ஷ்டவசமாக  உயிர்தப்பினார்.

பவுரம்பேட்டையில் உள்ள கீதாஞ்சலி பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் அபிமன்ஷு ரெட்டியை பள்ளிக்குக் கூட்டிச் சென்ற தாய், ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டரில் வந்தபோது, கனரக டிப்பர் லாரியை முந்தும் முயற்சியில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

சில வினாடிகளில், சிறுவன்  லாரியின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி உயிரிழந்தான். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த வாரம் சென்னை பெரம்பூரில் நடந்தது. பேப்பர்மில்ஸ் சாலையில் தாயுடன் பள்ளிக்குச் சென்ற 10 வயது சிறுமி, லாரி மோதியதில் உயிரிழந்தார். இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.