அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகளானது காணவில்லை என RBI-ல் பெறப்பட்ட தகவல்களின் படி அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய், சமூக ஊடகங்களில் இத்தகவலை வெளியிட்டு இதுபற்றி விசாரிக்க கோரி மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். ரூபாய் நோட்டு காணாமல்போனது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என அச்சம் எழுந்தது.

ரூ.500 நோட்டுகள் காணாமல்போன அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியானது நிராகரித்து விட்டது. பின் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட தகவல்களின் “தவறான விளக்கத்தின்” அடிப்படையில் அறிக்கை உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்தது. பணம் அச்சிடப்படும் அச்சகங்களிலிருந்து வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் RBI-ல் உரிய கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. அச்சகங்களில் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் ரூபாய் நோட்டுகளை கண்காணிக்க வலுவான அமைப்புகள் இருக்கிறது. அதில் ரூபாய் நோட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் போன்றவற்றை கண்காணிக்கும் நெறிமுறைகளும் அடங்கும் என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.