மறைந்த குடியரசுத் தலைவர் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளையொட்டி, கடந்த 2022–23ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில், சேலம் அரசு கலைக் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கருவிகள் படைப்புத்திறன் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில், சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களை பெங்களூரு அருகிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக அரசு மாணவர்கள் 50 பேர் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வாயிலாக இன்று பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்.