வெளிநாடுகளில் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வசிப்பது ஒருவரது வாழ்க்கையையும், வங்கிச் சேமிப்பையும் எப்படி மாற்றும் என்று இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் ருச்சி வெளியிட்ட வீடியோ, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெளிநாடுகளில் வாழும்போது எதிர்கொள்ளும் சவால்களும், சுதந்திரமும் ஒருவருக்கு மிகச்சிறந்த வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் என்றும், பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றத்தைத் தரும் என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலர், வெளிநாடுகளுக்கு எப்படிச் செல்வது என்று அவரிடம் ஆலோசனைகளைக் கேட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இருப்பினும், இந்த கருத்திற்கு இணையவாசிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இந்தியாவிலேயே தங்கி, படித்து நல்ல நிலைக்கு வர முடியும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று சாதாரண வேலைகளைச் செய்வதை விட தாய்நாட்டிலேயே கௌரவமாக வாழலாம் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் எதிர்கொண்டு வரும் இனவெறித் தாக்குதல்கள் மற்றும் “உங்கள் நாட்டிற்கே திரும்பிப் போங்கள்” என்று உள்ளூர் மக்கள் கத்தும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, பலரும் தங்களின் அச்சத்தையும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
