சமூக வலைத்தளங்களில் எப்போது என்ன மாதிரி விஷயங்கள் பேசுபொருளாக மாறும் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. அந்த வகையில், எக்ஸ் தளத்தில் இளம் பெண் ஒருவர் பகிர்ந்த பதிவு ஒன்று தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் புருவ உயர்த்தலையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆண்டுக்கு ₹40 லட்சம் சம்பளம் வாங்கும், நல்ல தோற்றமுடைய ஒரு வரனைத் தான் நிராகரித்துவிட்டதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக திருமண பேச்சுகளின் போது சம்பளம், பின்னணி மற்றும் தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், இந்த நிராகரிப்புக்கு அந்தப் பெண் கூறிய அரசியல் ரீதியான காரணம் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பெண் தனது பதிவில், தமக்கு வந்த திருமண வரன் நிதி ரீதியாகவும் தோற்றத்திலும் மிகச் சிறந்ததாக இருந்தபோதிலும், அந்த நபரின் அரசியல் கொள்கை தமக்கு உடன்பாடாக இல்லை எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த நபர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தனது ‘ரோல் மாடலாக’ கருதுவதாகக் கூறியதே இந்த நிராகரிப்புக்கு முதன்மையான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் தீவிர தேசியவாத சிந்தனை கொண்டவர் என்றும், தமக்கு உடன்பாடு இல்லாத ஒரு அரசியல் தலைவரை வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் ஒருவருடன் வாழ்நாளைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் அந்தப் பெண் தனது முடிவுக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்த விசித்திரமான பதிவு வெளியான குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் இருவேறு முனைகளாகப் பிரிந்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் போது தனிப்பட்ட கொள்கைகளும் அரசியல் ரீதியான சிந்தனைகளும் ஒத்துப் போவது முக்கியம் என்று அந்தப் பெண்ணின் முடிவை ஆதரிக்கின்றனர்.
அதேவேளையில், மற்றொரு தரப்பினரோ திருமணம் போன்ற வாழ்நாள் பந்தத்திற்கு தனிநபரின் குணம், பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றைப் பார்க்காமல் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று விமர்சித்து வருகின்றனர்.
