நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும் வேட்டாம்பட்டியை சேர்ந்த சினேகா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இதில் சினேகா, திருமணமான சில மாதத்திலேயே சுரேந்திரனை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை செல்வராஜின் வீடு திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு அருகிலுள்ள காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது செல்வராஜ், பூங்கொடி, சுரேந்தர் ஆகிய மூன்று பேரும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.