தெற்கு டெல்லியின் புகழ்பெற்ற மவுண்ட் கைலாஷ் பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில், தனது வீட்டில் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மீனா ஹால்தர் (50) என்ற பெண் தொழிலாளியை, அவரது முதலாளியான தோல் மருத்துவர் மனிஷ் குப்தா கிரிக்கெட் பேட் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். வியாழக்கிழமை காலை டாக்ள்டர் மனிஷ் குப்தாவின் மனைவி டாக்டர் டினா குப்தா வேலைக்குச் சென்ற பிறகு, காலை 10:30 மணியளவில் வீட்டிற்கு வந்த மீனா, வழக்கமான வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மொட்டை மாடியில் துணிகளை உலர்த்தச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு சென்ற மனிஷ் குப்தா, மீனாவின் தலையில் கிரிக்கெட் பேட்டால் பலமாகத் தாக்கியதோடு, அவர் கீழே விழுந்த பிறகு கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இரத்தக் கறையுடன் கூடிய ஆயுதங்களை படிக்கட்டுகளுக்கு அருகில் வீசிவிட்டுச் சென்ற மனிஷ் குப்தாவை போலீஸார் கைது செய்த போது, அவர் “என்னை தூக்கிலிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையின் போது, மீனா ஹால்தர் வீட்டிற்குள் “கெட்ட ஆற்றலை” (Bad Energy) கொண்டு வருவதாகவும், இதனால் தனது மகனின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் கூறி அவரை வேலையை விட்டு நீக்குமாறு மனிஷ் குப்தா தனது குடும்பத்தினரிடம் பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவரது பேச்சை குடும்பத்தினர் கேட்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மொட்டை மாடியில் தனியாக இருந்த மீனாவை அவர் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, எப்போதுமே சரியான நேரத்திற்கு வேலைக்கு வரும் மற்றும் தங்களைப் பற்றி உயர்வாகப் பேசும் தனது தாயை எதற்காகக் கொலை செய்தார்கள் என்று புரியாமல் மீனாவின் மகன் ராபின் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் அக்குடியிருப்புக்கு வெளியே திரண்டு நீதிகேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் மீனாவின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.