புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பிரஷியாவுக்கு காது குத்தும் நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்தார். இதற்காக நேற்று மணிகண்டன் தனது மனைவி பாரதி, தாய் கிருஷ்ணவேணி, உறவினர்கள் உள்ளிட்டோருடன் சுற்றுலா பேருந்தில் பழனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்தை புஷ்பராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் கணக்கன்பட்டி மூகாம்பிகை கோவில் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் டிரைவர், பிரஷியா, பாரதி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.