தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்க குறைபாடு,பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாட்டு உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின் போது ஆய்வாக உதவியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளித் தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறை தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்கை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி செய்முறை தேர்வு எழுத வேண்டும். செய்முறை தேர்வுகள் நடத்துவதற்கு ஆசிரியர்கள் போதுமான அளவு நியமிக்கப்பட வேண்டும். இயற்பியல் செய்முறை தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கலாம். செய்முறை தேர்வுக்கு அரசு தேர்வு துறையால் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவு செய்து மார்ச் 11ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.