
புதுச்சேரியில் கடந்த மே 28 ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் பாட்டில்களுக்கு ரூ.10 வரை, குவார்ட்டர் வகை மதுபானங்களுக்கு ரூ.6 முதல் ரூ.30 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் குறைவாக இருப்பதை சமாளிக்கவே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மதுக்கடைகளுக்கான உரிமக் கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் கடைகளுக்கு வருடாந்தம் செலுத்தும் கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சில்லறை மதுக்கடைகளுக்கான வருடாந்த கட்டணமும் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
மேலும், சுற்றுலா துறையின் கீழ் உணவகங்களில் இயங்கும் மதுக்கூடங்களுக்கு செலுத்த வேண்டிய ஆண்டுக் கட்டணம் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. இதனுடன், மதுபானங்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கலால் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமக் கட்டணங்களில் இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.