ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சொகுசு விடுதியான ‘ஓபிராய் உதய்விலாஸ்’ ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கிவிட்டு, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தாமல் தலைமறைவான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அனுராக் யாதவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அந்தப் பிரபல ஓட்டலில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

அங்கு சுவையான உணவு வகைகள் மற்றும் பல்வேறு உயர்ரக ஹோட்டல் சேவைகளைப் பயன்படுத்தியதன் மூலம் அவர்களின் தங்குமிடக் கட்டணம் மற்றும் செலவுத் தொகை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 74 ஆயிரத்து 844 ரூபாயாக உயர்ந்தது . உடனே ஹோட்டல் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட டிராவல் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அப்படிப்பட்ட எந்தவொரு பணமும் செலுத்தும் ஒப்பந்தமோ அல்லது ஏற்பாடோ தங்களுக்குள் செய்யப்படவில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் அதிர்ந்துபோன ஹோட்டல் நிர்வாகம் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தது.

இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் அந்த டிராவல் ஏஜென்சியும் திட்டமிட்டு ஹோட்டல் நிர்வாகத்தை ஏமாற்றும் நோக்கில் இந்த மோசடிச் செயலில் கூட்டாக ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்திக்கின்றனர். சொகுசு விடுதிகளில் இதுபோன்று உல்லாசமாகத் தங்கிவிட்டுப் பணம் கொடுக்காமல் ஏமாற்றும் நூதனமான இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.