
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 4 சிறுவர்கள், 15 வயதான சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த சிறுமி கர்ப்பமாகிய பிறகு, பாட்னா கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு சிறுவனுடன் நட்பாக பழகினார். பின்னர், இருவரும் முதல்முறையாக நாளந்தா மாவட்டம் தீப்நகரில் உள்ள ஓர் ஹோட்டலில் சந்தித்துள்ளனர்.
பின்னர், அந்த சிறுமியின் தோழியின் அழைப்பின் பேரில், சிறுமி பாட்னா வந்துள்ளார். அதன்பின், மெஹந்திகஞ்ச், பைபாஸ் மற்றும் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களில், அந்த சிறுவனும், அவரது மூன்று நண்பர்களும் மாறிமாறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தை ஆரம்பத்தில் குடும்பத்தினரிடம் தெரிவிக்காத சிறுமி, தனது கர்ப்பம் உறுதியாகியதும் உடனடியாக காவல்துறையை நாடியுள்ளார். தற்போது பாட்னா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 4 சிறுவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.