ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் மீது இளம்பெண் ஒருவர் சுமத்தியுள்ள பாலியல் ரீதியான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், பெயரைக் குறிப்பிடாத இளம்பெண் ஒருவர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் தன்னை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

வீடியோவில் உள்ள தகவலின்படி, ‘அதிதி’ என்ற அந்தப் பெண்ணுக்கு சமூக வலைதளம் வழியாக அந்த வீரர் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் அந்த வீரர் ஒரு கிரிக்கெட்டர் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. சாதாரண நண்பர்களாகப் பழகிய பிறகு, அவர் ஐபிஎல் வீரர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அந்தப் பெண் கூறுகையில், “எங்கள் சந்திப்பின்போது, அந்த வீரர் என்னிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்றார். நான் அதைத் தட்டிக்கேட்டேன். பின்னர், ஐபிஎல் தொடர் தொடங்கிய பிறகு மீண்டும் என்னிடம் பேசத் தொடங்கினார். வெளியே சந்திக்க முடியாது என்றும், ஒரு ஹோட்டல் அறைக்கு வருமாறும் வற்புறுத்தினார். ஹோட்டலுக்கான கட்டணத்தையும் நானே செலுத்தச் சொன்னார்” என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவ்வித ஆதாரங்களும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆதாரங்கள் இல்லாத வெறும் வாய்மொழி குற்றச்சாட்டு என்பதால், இது வெறும் ‘வியூஸ்களுக்காக’ (Views) உருவாக்கப்பட்ட கற்பனைக் கதையாக இருக்கலாம் என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.


மற்றொரு தரப்பினர், இது போன்ற குற்றச்சாட்டுகள் விளையாட்டின் மீதான நன்மதிப்பைப் பாதிக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நிர்வாகம் இது குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகமோ அல்லது சம்பந்தப்பட்ட வீரரோ இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பதால், இப்போதைக்கு இதை ஒரு சர்ச்சைக்குரிய சமூக வலைதளப் பதிவாக மட்டுமே பார்க்க முடிகிறது.