அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, ஹார்முஸ் நீரிணையில்  சிங்கப்பூர் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தரப்பில் டொனால்ட் டிரம்ப் இந்த அமைதி ஒப்பந்தம் தங்களின் பலத்தைக் காட்டுவதாகக் கூறிவந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வியாழக்கிழமை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பிரிட்டிஷ் கடற்படை அமைப்பான ‘UKMTO’ உறுதிப்படுத்தியுள்ளன. இந்த திடீர் தாக்குதலால், தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

 


முன்னதாக, தங்கள் பிராந்திய கடல்வழி விதிமுறைகளை மீறிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கப்பல் நிர்வாகமே பொறுப்பு என்றும் ஈரானின் கடல்வழிப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்திருந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

இதற்கிடையே, பனாமா கொடி ஏந்திய இரு கப்பல்களையும் ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாதையை மாற்றக் கட்டாயப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் முற்றிலும் பலவீனமடைந்துள்ளதாகவும், அவர்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதி அளித்து அமெரிக்காவிடம் இந்த ஒப்பந்தத்திற்காக கெஞ்சியதாகவும், விரைவில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்கும் என்றும் வெள்ளை மாளிகையில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.