
இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி சோனம் நேரடியாக தொடர்புடையவராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சோனம் கூலி ஆட்களை வைத்து இந்த செயலை திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூன் 2ஆம் தேதி வைசாவடோங் நீர்வீழ்ச்சி அருகே ராஜா ரகுவன்ஷியின் உடல் கூர்மையான ஆயுதக் குத்துக்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தேடிய போலீசார், சோனம் ரகுவன்ஷியை ஜூன் 8–9 தேதிகளில் உ.பி.-யின் காஜிபூரில் உள்ள ஒரு தாபாவில் கைது செய்தனர். சோனம் கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். அவர் தனது சகோதரனை தொடர்புகொண்டதும், போலீசார் அவர் இருப்பிடம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது சோனத்தின் காதலரான ராஜகுஷ்வாஹா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது சிசிடிவி காட்சிகள், தொலைபேசி தொடர்புகள், பயண சந்திப்புகள் போன்றவைகளை ஆய்வு செய்து அவரை கைது செய்துள்ளனர். தன் கணவரை கொலை செய்வதற்கு முன்பாக ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது ஒரு திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் அவரது கொலைக்கான உண்மை காரணம் தெரிய வராததால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.