
தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..
ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவு படுத்திட வேண்டும் – சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும் – ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களுக்கு கடிதம் :
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச்சாலை பணிகளை விரைவு படுத்தவும், சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் என தெரிவித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நித்தின் கட்கரி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையிலிருந்து ராணிப்பேட்டை (NH-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென திரு.தயாநிதி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையை குறிப்பிட்டு இந்த சாலை சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்தச் சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதன் காரணமாக சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு தான் ரயிலில் செல்ல நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த சாலை தொடர்பான தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதிலால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் குறிப்பாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச்சாலை திட்டத்திற்கு சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய NHAI திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
நெடுஞ்சாலை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை கண்காணிக்க மாநில தலைமையகத்தில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அனுமதி பெறப்படுவது தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்யப்படுவதாகவும், தான் அறிந்த வரையில் எந்த ஒரு பெரிய NHAI திட்டமும் அத்தகைய அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குவாரி மண் எடுக்க அனுமதி வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொருட்களுக்கான விலை உரிமத் தொகை மற்றும் தீர்வை வரி கட்டணத்தை தள்ளுபடி செய்வது, இலவசமாக மண் எடுக்க அனுமதி போன்ற மற்ற கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு இத்தகைய நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மாநில அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அது உண்மையல்ல என்றும், மாநிலம் மற்றும் ஒன்றிய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல் அனைத்து முக்கிய உள் கட்டமைப்பு திட்டங்களையும் விரைவுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திரு தயாநிதி மாறன் அவர்கள் குறிப்பிட்ட கோரிக்கையை பரிசீலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வழங்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தேசிய நெடுஞ்சாலை 4-ல் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிப்பாதை பணி நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், இடையே ஏற்பட்ட ஒப்பந்த பிரச்சனையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு தற்போதுள்ள சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2020 டிசம்பர் மாதம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சின்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் இது போன்ற மோசமான பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை 50% குறைத்தது குறிப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சாலைகளின் மோசமான நிலைமை, பயனர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் (NH-4) ஆறு வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களை கேட்டுக் கொண்டுள்ளதோடு ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்..
தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும், சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும்,
1/2 pic.twitter.com/27wGCKNysB
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 11, 2023