கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துப் பேருந்து நடத்துநர் ஒருவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் விடுத்த வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று முதல் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் எங்கு லிஃப்ட் கேட்டாலும் பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று தனது ஓட்டுநரிடம் அவர் தெரிவித்துள்ளார். “நாம் சேருமிடத்திற்குச் செல்ல தாமதமானாலும் பரவாயில்லை, மாணவர்களுக்கு உதவுவோம்” என்று அவர் கூறியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

​மேலும், தனது பேருந்து மட்டுமல்லாமல் மற்ற அரசுப் பேருந்துகளும் இதே முறையைப் பின்பற்றி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடமையையும் தாண்டி மனிதாபிமானத்துடன் செயல்படும் கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் இந்தச் செயல், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த நடத்துநரின் பெரிய மனதை நெட்டிசன்கள் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.