மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள மவாய் காட் வித்யாலயா பள்ளியில், போதையில் இருந்த இளைஞர்கள் இருவர்  புகுந்து ஆசிரியர்களைத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் கண்டனத்தைப் பெற்றது. கவுரிஹார் காவல் நிலையப் பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில், போதையில் இருந்த இரு இளைஞர்கள் பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.

ஆசிரியர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், இளைஞர்கள் கூச்சலிட்டு, பள்ளியில் பாடம் நடத்துவதைத் தடுத்து, மாணவர்களை பயமுறுத்தினர். வைரலான வீடியோவில், இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தெரிகிறது, மேலும் அங்கிருந்த பெண்கள் இதைத் தடுக்க முயன்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிரியர் வைபவ் குமார் சாஹு, கல்வித்துறையில் எழுத்துப்பூர்வ புகார் அளித்து, இத்தகைய போதை ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.