மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் குதிரை வண்டியில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த வண்டியில் மொத்தம் இரு குதிரைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் அதில் ஒரு குதிரை வெயிலின் தாக்கம் காரணமாக சாலையில் மயங்கி விழுந்தது. அப்போது அந்த குதிரையின் மேய்ப்பாளர்  அதனை மிகவும் கொடூரமாக அடித்து தாக்கி இழுத்து செல்கிறார். இது தொடர்பான வீடியோவை பீட்டா இந்தியா அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டதோடு இது தொடர்பாக உடனடியாக முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோன்று சுவாதி மாலிவாலும் இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் நடிகை பூஜா பட் உள்ளிட்டோரும் இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த குதிரையின் மேய்ப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த குதிரைக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பீட்டா அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.