உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பூர்வாஞ்சல் ஹைட்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை, பாஜக எம்எல்ஏ தேஜ்பால் சிங்கின் மகள் பிரியங்கா நகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் கார், பிரியங்காவின் காருடன் லேசாக மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரியங்கா தனது நண்பர்களுடன் அந்த வீட்டிற்குச் சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை தரக்குறைவாகப் பேசி, தாக்கியதாக அவரது கணவர் அதுல் குப்தா கூறியுள்ளார். இது தொடர்பாக சூரஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ தேஜ்பால் சிங், தனது மகள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும், பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே சென்றதாகவும்கூறியுள்ளார். இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.