
இந்தியாவில் 1364 வகையான பறவை இனங்கள் உள்ளது. அதில் 194 வகை பறவை இனங்கள் உலக அளவில் அழியும் நிலையில் உள்ளன. இது போன்ற அழியும் நிலையில் உள்ள பறவைகளை பாதுகாக்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து பறவைகளைக் கொண்டு வந்து வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயமாகும். அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களை வணிக நோக்கில் வளர்ப்பவர்கள் இனப்பெருக்கம் செய்து விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்படி அனுமதிக்கப்படும் சிலவகை பறவைகளை வீடுகளில் வளர்க்கலாம். இருந்தாலும் விவரங்களை தமிழக அரசுக்கு மக்கள் தெரியப்படுத்த வேண்டும். வீடுகளில் பறவைகளை வளர்ப்போறும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். பறவைகளை அடையாளப்படுத்துவதற்கு அதன் கால்களில் மாற்றுவதற்கான வளையங்கள் வழங்கப்படும். வீடுகளில் இந்த பறவைகளை வளர்க்க எத்தகைய இடவசதி ஏற்படுத்த வேண்டும், உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பறவைகள் எதையும் யாரும் வீடுகளில் வைத்துக்கொள்ளக்கூடாது. விதி மீறலில் ஈடுபடுவோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தடை செய்யப்பட்ட கிளி மற்றும் மயில் போன்ற பறவைகளை வளர்ப்பவர்களுக்கு இது பொருந்தும்.