வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதோடு அடிக்கடி வீடியோ காலிலும் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவ நாளிலும் ரேவதி வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அரிவாள் மனையை எடுத்து தன் மனைவியின் கையை வெட்டியுள்ளார். இதனால் ரேவதி வலியால் அலறி துடித்துள்ளார்‌. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.