பீகார் மாநிலம் ஷியோஹர் மாவட்டத்தில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகப் பாம்புடன் விளையாடிய ஒரு ஆசிரியர், பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவல் கிஷோர் சிங் என்ற அந்த ஆசிரியர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிடிபட்ட விஷப்பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு வித்தை காட்டுவது போலவும், அதை வைத்து மாணவர்கள் வீடியோ எடுக்குமாறும் கூறியுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாகப் பாம்பு அவரைத் தாக்கியதில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த நவல் கிஷோர் சிங் அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் ஒரு சிறந்த கல்வியாளர் மட்டுமல்லாமல், பாம்புகளைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் அறியப்பட்டார்.

“>

இந்நிலையில் அவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு, விழிப்புணர்வு இல்லாமல் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள மோகம் மனித உயிர்களைப் பறிக்கும் அளவிற்கு விபரீதமாக மாறிவருவதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு சாட்சியாக அமைந்துள்ளது.