இத்தாலியின் மிலான் பெர்கமோ (Milan Bergamo) விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு பயங்கரமான சம்பவம், உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்சினேட் (Calcinate) பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ட்ரியா ருசோ என்பவர், தனது Fiat 500 காரை விமான நிலையத்துக்கு அருகே நிறுத்திவிட்டு, டிக்கெட் இல்லாமல் விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

பாதுகாப்பு தடைகளை மீறி ஓடுபாதைக்கு (runway) நுழைந்த அவர், எல்லைப் பாதுகாப்பு போலீசாரைத் தவிர்த்து, நேராக ஸ்பெயினுக்குப் புறப்பட இருந்த Volotea விமானம் V73511-ஐ நோக்கி ஓடினார்.

அந்த விமானம் Airbus A319 வகையைச் சேர்ந்தது. அது புறப்பட தயாராக இருந்த நேரத்தில், ருசோ திடீரென விமானத்தின் இடது பக்கத்தில் உள்ள இன்ஜினுக்குள் (port-side turbofan) பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த தருணம் பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். விமானத்தின் பைலட், “ஒரு நபரால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது” என பயணிகளிடம் அறிவித்தார். உடனடியாக போலீசார் மற்றும் மீட்புப்பணியாளர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்ட்ரியா ருசோ, முன்பு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருந்ததாகவும், சில மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்றிருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நேரில் பார்த்த பயணிகள் இந்த பயங்கர சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தற்போது வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.