ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், வியாழக்கிழமை அன்று அரங்கேறிய ஒரு கோர விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 32 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் டி. அனுதீபக் என்பவர் தனது காரில் சித்தூர் – திருப்பதி சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தார். பால திரிபுர சுந்தரி கல்யாண மண்டபம் அருகே உள்ள ஒரு பரபரப்பான நான்கு வழிச் சந்திப்பில் அவர் வந்தபோது, எதிரே வேகமாக வந்த ஒரு கனரக கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

​விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. அந்த வீடியோவில், எதிரே லாரி வருவதைப் பார்த்ததும் பயத்தில் காரை நடுரோட்டிலேயே அனுதீபக் நிறுத்தியுள்ளார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பிரம்மாண்ட கன்டெய்னர் அப்படியே கார் மீது சரிந்து விழுந்தது. லாரியின் பாரம் தாங்காமல் கார் அப்பளத்தைப் போல நசுங்கியது. காரின் உள்ளே இருந்த அனுதீபக் தப்பிக்கக் கூட வாய்ப்பு இல்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

​தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். கன்டெய்னர் லாரியில் பாரம் சரியாக ஏற்றப்படாமல் சமநிலை தவறியதா அல்லது டிரைவரின் அஜாக்கிரதையா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு திறமையான இளைஞரின் உயிர் இப்படி அநியாயமாகச் சாலை விபத்தில் பறிபோனது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.