
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் பாதுஷா – ரம்ஜான்பீவி தம்பதியினர். இவர்களுக்கு முகமது ஆசிப்(12) என்ற மகன் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு அவரது சித்தி பணிபுரியும் தனியார் அச்சகத்திற்கு முகமது அவருடன் சென்றுள்ளார்.
அச்சகத்தில் பொருட்களை ஏற்றி இறக்கும் லிப்டில் முகமது ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது லிப்டில் இருந்து ஆசிப் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்தி சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.