தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரண்டு குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கேக் வெட்டி ஊட்டி போட்டோ சூட் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மதுகர் ரெட்டி காணாமல் போய்விட்டார்.

அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையே மதுகர் ரெட்டி வேறு ஒரு பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அந்த போட்டோவை பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது காதலியை திருமணம் செய்து கொண்டதாக கூறியதால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்த போது மணமகள் குடும்பத்தினர் 40 லட்சம் மதிப்புள்ள அரை ஏக்கர் நிலம், 15 பவுன் தங்க நகை, 6 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

அதனை திருப்பித் தர வேண்டும் என மணமகள் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் மதுகர் ரெட்டியின் தந்தை ஸ்ரீநிவாஸ் ரெட்டி தனது மகனுக்கு ஆதரவாக பேசி பணத்தை திரும்பத் தர முடியாது என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என கூறியதால் மதுமிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மதுகர் ரெட்டியை தேடி வருகின்றனர்.