தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு, மாநில அரசியல் வரலாற்றில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இந்த வெற்றிக்குக் காரணமான ‘குட்டி’ ரசிகர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்த கையோடு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை ஜனநாயகக் கடமையாற்றத் தூண்டிய குழந்தைகளை “விஜய் மாமாவின் நன்றிகள்” என அன்போடு குறிப்பிட்டுள்ளார். அரசியல் என்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற பிம்பத்தைச் சாதாரண மக்கள் உடைத்துவிட்டதாகவும், குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டதால் வாக்குச்சாவடிகள் கோயில் திருவிழாவைப் போலக் காட்சியளித்ததாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேர்தல் களத்தில் சில அவமதிப்புகளை எதிர்கொண்ட போதிலும், தளராமல் பணியாற்றிய தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் முகவர்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் எனத் தனித்தனியே உரிமை கோரி வரும் நிலையில், விஜய்யின் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் அரசியலில் நுழைந்த போது ஏற்படாத ஒரு எதிர்பார்ப்பு, தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் விஜய்யின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் வெறும் 7 மாவட்டங்களில் மட்டுமே நேரில் சென்று பிரச்சாரம் செய்திருந்தாலும், சமூக வலைதளங்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பை நம்பி களம் கண்ட விஜய், எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா வழியில் தனது முதல் தேர்தலிலேயே கோட்டையைப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது.

“>