பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான ‘சூப்பர் முஷாக்’ என்ற பயிற்சி விமானம் இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.

மேலும் வழக்கமான பயிற்சிக்காக வானில் பறந்த இந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சாலையின் மீது நேராக விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த அடுத்த கணமே அது பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது.

“>

இந்நிலையில் இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த கேப்டன் காசிம் அப்துல்லா மற்றும் லெப்டினன்ட் தாகா அப்பாசி ஆகிய இரண்டு பயிற்சி விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விமானம் விழுந்த சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்து பாகிஸ்தான் விமானப்படை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து ராணுவ வான்வழி விபத்துகள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் முசாஃபராபாத் அருகே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ராணுவத்தின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

அதேபோல் கடந்த மே 20 அன்றும் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு பயிற்சி போர் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் விபத்துகள் பாகிஸ்தான் ராணுவ வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.