தமிழ்நாட்டிற்கு மட்டும் பாரபட்சத்தோடு மத்திய அரசு நடந்து கொள்வது சரியான அணுகுமுறை கிடையாது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2025 – 26 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  இதில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. ஆண்டிற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டுவதற்கு வருமானவரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமாற வரவேற்கிறேன். இதன் மூலமாக நடுத்தர மக்களுக்கு குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்தது மகிழ்ச்சி.

அதே சமயம் பெரும்பான்மையான ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் டீசல் வரி குறைப்பு , ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்தவும் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் போதிய அறிவிப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை.

காற்றாலை சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகள் அளிக்கும் அனுமதி உற்பத்தி தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். வழக்கம்போல இந்த வருடமும் மத்திய அரசு தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவிக்காமல் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்துள்ளது . அனைத்து மாநிலங்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பாரபட்சத்தோடு நடந்து கொள்வது சரியான அணுகுமுறை கிடையாது” என்று கூறியுள்ளார்.