தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து செலுத்த கோரி ஆட்டோ மூலம் பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகியின் உத்தரவின் பேரில் குடிநீர் வரி  செலுத்தாதவரின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

இதில் வல்லம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், மெக்கானிக் பிரதீஷ் மற்றும் பணியாளர்கள் வல்லத்தில் உள்ள தெருக்களில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை துண்டித்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகன்தநாயகி கூறியதாவது, வணிகவளாகம், சொத்துவரி, குடிநீர் வரி, குடியிருப்புகளுக்கான சொத்து மற்றும் குடிநீர் வரியை ஒரு சிலர் பல வருடங்களாக செலுத்தாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் வல்லம் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும்  பணியாளர்கள் மூலமாக பொதுமக்களிடம் வரி செலுத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும் ஒரு சிலர் தற்போது வரை குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான குடிநீர் கட்டணம் பேரூராட்சிக்கு  வர வேண்டி உள்ளது. அதனால் குடிநீர் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளை பணியாளர்கள் மூலமாக துண்டித்து வருகிறோம். எனவே விரைவில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தினை பொதுமக்கள் நிலுவை  இல்லாமல் செலுத்தி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.