
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரியும் ஊழியர்களிடையே ஏற்பட்ட சண்டை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. ரயிலின் சீரான சேவைக்குப் பெயர்போன வந்தே பாரத் உள்ளிட்ட வேக ரயில்களில் இதுபோன்ற சச்சரவு நடைபெறுவதே பயணிகளையும் பொதுமக்களையும் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தில், கேட்டரிங் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
Kalesh b/w Cleaning staff and Catering staff inside Vande bharat express. pic.twitter.com/fQIyf9ViDm
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 29, 2025
27 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், முதலில் சில ஊழியர்கள் பெட்டியின் கதவைத் திறந்து வெளியே வருவதைக் காணலாம். பின்னர் குளியலறை அருகே வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. இந்த வீடியோவில், 3 முதல் 4 பேர் வரை சண்டையில் ஈடுபடுவதை வீடியோவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர்.
இந்த சம்பவம் எப்போது, எங்கே, எந்த வந்தே பாரத் ரயிலில் நடந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், இந்த வீடியோ தற்போது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள், 2,000க்கும் மேற்பட்ட விருப்பங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கருத்துகள் பெற்றுள்ளது. பல பயனர்கள் இது வேலை அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும், பண விநியோக சிக்கலால் ஏற்பட்ட முரண்பாடாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதனைக் காணும் பயணிகள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள், “இதுபோன்ற ஊழியர்கள் எப்படி பொறுப்புடன் வேலை செய்வார்கள்?” என கேள்வி எழுப்புகின்றனர். மேலும், சிலர் இந்த ஊழியர்களிடம் வினோதமாகவே மனநிலை உள்ளது எனவும், இந்த மாதிரி பொறுப்பற்ற பணியாளர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த வீடியோ குறித்து ரயில்வே நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்காத நிலையில், இது தொடர்பாக பல கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகிறது.