தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த மாதம் அந்த பொருள்களை சேர்த்து ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாதவர்கள் ஜூலை மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீண்பழி சுமத்த கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.