
அகிம்சை கொள்கைக்கு உலகளவில் முக்கிய பாரம்பரியம் வாய்ந்தவரான மகாத்மா காந்தியின் கொள்ளுபேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின் (56), தற்போது தென்னாப்பிரிக்காவில் பெரும் பண மோசடியில் சிக்கியுள்ளார்.
அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் ஆசிஷ் லதா, தென்ஆப்பிரிக்காவின் ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குநரான மகாராஜை அண்மையில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தனக்குத் தென்ஆப்பிரிக்காவின் பிரபல நெட்கேர் மருத்துவமனைக்கு இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களாக துணிகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கான வரி செலுத்த 6 மில்லியன் ரேண்ட் (இந்திய மதிப்பில் ₹3.22 கோடி) பணம் தேவை எனக் கூறி மகாராஜிடம் பணம் கேட்டுள்ளார்.
மேலும், இந்த தகவலுக்கு ஆதாரமாக போலியான வர்த்தக ஆவணங்களையும் வழங்கினார். மகாத்மா காந்தியின் வம்சாவளியராக இருப்பதால் அவரை நம்பிய மகாராஜ், கேட்டபடி பணம் வழங்கியுள்ளார்.
ஆனால், நாட்கள் கடந்தும் பணம் திருப்பித் தரப்படவில்லை; மேலும்ஆவணங்கள் போலியானவை என தெரிந்து, மகாராஜ் டர்பன் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, ஆசிஷ் லதா பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், 50,000 ரேண்ட் (சுமார் ₹2.6 லட்சம்) பிணைத் தொகை செலுத்தி, ஆசிஷ் லதா தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். மகாத்மா காந்தியின் வாரிசு இந்த வகையான மோசடியில் சிக்கியிருப்பது, உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.