
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தெருவோர வியாபாரியிடமிருந்து வாங்கிய ஐஸ்கிரீமில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், ரூ.20-க்கு இரண்டு சாக்லேட் குல்பி பார்கள் வாங்கி வீட்டில் சாப்பிடும்போது, அதில் ஒரு இறந்த பல்லி இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
சிறுமியின் பாட்டி கூறியதாவது, “குழந்தை ஐஸ்கிரீமில் ஒரு பகுதி பல்லியை விழுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்றார். பொதுமக்கள், ஐஸ்கிரீம் விற்பனையாளர் வண்டியுடன் சிக்கியதை தொடர்ந்து, அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ‘மில்க் பெல்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட அந்த ஐஸ்கிரீம், தரமற்ற உணவுப் பொருள்களின் அச்சத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. .
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட சுகாதாரத் துறையும், உணவுப் பாதுகாப்புத் துறையும் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளன. ஐஸ்கிரீம் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளன. குழந்தையின் நிலை தற்போது நிலையாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி தெருவோரத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.