இந்திய ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் அசாத்தியமான விளையாட்டு நுண்ணறிவு மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் இலங்கை வீரர் பசுந்து சூரியபண்டாரா 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சதத்தை நெருங்கிய வேளையில் அவர் விக்கெட்டைப் பறிகொடுத்த இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் பொருளானது.

இலங்கை வீரர் பசுந்து சூரியபண்டாரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ரன்கள் குவித்து ஆடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர் எல்.பி.டபிள்யூ  முறையில் அவுட்டானது போல் தோன்றியதால் டி.ஆர்.எஸ் மேல்முறையீடு செய்யப்பட்டது. ரிவ்யூவில் மட்டையின் உள்ளும் பகுதியில் பந்து உரசியது தெரியவர, சூரியபண்டாரா தப்பினார்.

இருப்பினும், பந்தின் கூர்மையான கண்கள் அந்த பேட்ஸ்மேனின் மனநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டன. நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடியதால் சூரியபண்டாரா சற்று பதற்றமடைந்து, எப்படியாவது பெரிய ஷாட் அடிக்க முற்படுவார் என்பதை ரிஷப் பந்த் சரியாகக் கணித்தார். உடனே மிட்-ஆன்  திசையிலிருந்த ஃபீல்டரிடம் உஷாராக இருக்குமாறு அவர் எச்சரித்தார்.

 

ரிஷப் பந்த் கணித்தது போலவே, அடுத்த பந்திலேயே சூரியபண்டாரா க்ரீஸை விட்டு வெளியேறி சிக்சர் அடிக்க ஓடிவந்தார். இதைக் கணித்த பந்துவீச்சாளர் மானவ் சுதார், பந்தின் வேகத்தைக் குறைத்து ஆஃப்சம்பிற்கு வெளியே சற்று அகலமாக வீசினார். ஏற்கனவே பந்தை நோக்கி ஓடத் தொடங்கிய சூரியபண்டாராவால் தனது கட்டுப்பாட்டை இழந்து, பந்தைத் தொடக்கூட முடியவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்ட ரிஷப் பந்த், பந்தைத் துரிதமாகத் தடுத்து ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

மேலும் 173 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 92 ரன்கள் குவித்திருந்த சூரியபண்டாரா, முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் எடுத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியை மீட்டெடுத்த அவர், வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தனது சதத்தை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். கடினமான சூழலிலும் ஆட்டத்தை வாசித்து, விக்கெட் வீழ்த்த உதவிய ரிஷப் பந்தின் சாதுர்யத்தை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.