லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிரிக்கெட் மைதானத்தை விட வெளியேயும் ஒரு பெரும் பரபரப்பு அரங்கேறியுள்ளது. முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும், லெஜண்ட் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின்  மகன்களின் நேர்காணலை பிரபல ஊடகமான ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’  ஒளிபரப்பியதே இந்த திடீர் பரபரப்புக்குக் காரணம்.

போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆத்தெர்டன்  இம்ரான் கானின் மகன்களான காசிம் மற்றும் சுலைமான் கான் ஆகியோருடன் நடத்திய 18 நிமிட பிரத்யேக நேர்காணலை ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியது.

லார்ட்ஸ் மைதானத்தில் முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணலில், சிறையில் வாடும் தனது தந்தையின் உடல்நிலை குறித்தும், அவரது மோசமடைந்து வரும் பார்வைத் திறன் மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்தும் அவர்கள் வெளிப்படையாகப் பேசியிருந்தனர். இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், அவரது உடல்நலம் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு ஒளிபரப்புக்குள் அரசியல் மற்றும் தனிப்பட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் கொண்டுவரப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்த்தது. மதிய உணவு இடைவேளையின் போதே ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு ஆட்சேபம் தெரிவித்த பிசிபி அதிகாரிகள், இந்த நேர்காணலை ஒளிபரப்பினால் இரண்டாம் கட்ட ஆட்டத்திற்கு பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திற்கு வர மாட்டார்கள் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

பாகிஸ்தான் வாரியத்தின் இந்த மிரட்டலால் சிறிது நேரம் ஒளிபரப்பு தாமதப்படுத்தப்பட்டாலும், ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அந்த நேர்காணலை இறுதியில் ஒளிபரப்பிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிசிபி, இதுகுறித்து முறையான புகாரையும் பதிவு செய்ததுடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும்  தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இருப்பினும், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட, மதிய உணவு இடைவேளை முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் வழக்கம் போல் களத்திற்குத் திரும்பி விளையாட்டைத் தொடர்ந்தனர். கிரிக்கெட் களத்திற்கு வெளியே நடந்த இந்த அரசியல் மற்றும் ஊடகச் சர்ச்சை அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது