ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை வேலூரில் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை திருப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, மேல்விஷாரத்தில் உள்ள இந்த சுகாதார நிலையத்துக்குள் சென்று ஆய்வு செய்த அமைச்சர், அங்கு  ஒரு பணியாளரும் இல்லை என்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

மருத்துவர், செவிலியர், காவலர் என ஒருவரும் இல்லாததால், “எங்க இருக்கீங்க?”, “ஏன் டியூட்டியில் யாரும் இல்லை?”, “எத்தனை நிமிஷத்தில் வர முடியும்?” என அதிகாரிகளை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக கேள்வி எழுப்பிய அமைச்சர், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறும் வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலைமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்ற இந்த சுகாதார நிலையத்தில், பணியாளர்கள் இல்லாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறையின் நம்பிக்கைக்குரிய நபராக அமைந்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதார சேவைகளின் நிலையை நேரில் பார்வையிட்டு, முறையான பராமரிப்பு இல்லாதமைக்காக அதிகாரிகளிடம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மருத்துவ சேவையின் தரத்தைக் காப்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.