
சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் உட்கோட்டத்துக்கு உள்பட்ட நிலையங்களில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை- திருப்பதி ரயிலில் சென்ற மாதம் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் பெட்டியில் பயணித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதோடு மட்டுமல்லாமல், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த கர்ப்பிணி பெண் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவம் தொடர்பாக வேலூரை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய 5 ரயில் நிலையங்களிலும் ரயில்வே காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் ரயில் நிலையங்களில் பெண் பாதுகாவலர்கள் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
ஆனால் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சேலம் வழியாக சென்ற ரயில்களில் பெண்கள் பெட்டியில் ஏறிய 40 ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுபோல சேலம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களான தர்மபுரியில் 26 பேரையும், ஓசூரில் 38 பேரையும், ஜோலார்பேட்டையில் 60 பேரையும், காட்பாடியில் 43 பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக சேலம் உட்கோட்டத்தில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி நுழைந்த ஆண்களின் எண்ணிக்கை 207 ஆகும். இவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.