மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரம் ஹின்ஜேவாடி பகுதியில், 25 வயதான மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் 21-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் அபிலாஷா பௌசாஹேப் கோடிம்பிரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மே 31ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் ஹின்ஜேவாடியில் உள்ள ‘கிரவுன் கிரீன்’ அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த இவர், அங்குள்ள லிஃப்டை பயன்படுத்தி 21வது மாடிக்கு சென்றதாக தெரிகிறது.

அங்கிருந்து நேராக குதித்த அபிலாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் பிம்ப்ரியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனையில், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளன எனவும், உயரத்தில் இருந்து விழுந்ததற்கான அடையாளங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீசார் அவரது அறையை சோதனை செய்தபோது, தற்கொலைக் குறிப்பு, ரத்தத்தில் நனைந்த நாப்கின்கள், உள்ளாடைகள், தலையணை உறை மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

தற்கொலைக் குறிப்பில், “இனி வாழ விருப்பமில்லை” என எழுதியிருந்ததுடன், பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இது மன அழுத்தத்தால் ஏற்பட்ட முடிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான எந்த காரணமும்  ஏற்கனவே தெரியவில்லை என்றாலும், ஹின்ஜேவாடி போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். \