மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே நிலவும் மோதல்கள் ஒருபுறம் இருக்க, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளியாகியுள்ள வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், தனது தலையில் பெரிய வெள்ளை நிற பேண்டேஜ் கட்டுடன் காணப்படுகிறார். பா.ஜ.க-வினர் தன்னைத் தாக்கியதாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அழுதுகொண்டே பேட்டியளிக்கிறார்.

அப்போது அங்கு வந்த பா.ஜ.க தொண்டர்கள் எனச் சொல்லப்படும் ஒரு கும்பல், அந்தப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு அவரது காயத்தின் உண்மைத்தன்மையை கேள்வி எழுப்புகின்றனர். ஒருகட்டத்தில் அவர்கள் அந்தப் பெண்ணின் தலைக்கட்டை வலுக்கட்டாயமாகப் பிரித்தனர். கட்டு அவிழ்ந்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணின் தலையில் எந்தவித காயமோ, வீக்கமோ அல்லது ரத்தக்கறையோ இல்லை.

கட்டு அவிழ்ந்ததும் அந்தப் பெண் மௌனமாக நிற்க, அவரைச் சூழ்ந்திருந்த நபர்கள் அந்தப் பெண்ணைத் தலையில்  தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, மீண்டும் அதே கட்டை அவரது தலையில் சுற்றிவிட்டு, “இப்போ போய் சொல்லு.. அப்போதான் மக்கள் உன்னை நம்புவாங்க!” என்று ஹிந்தியில் சத்தமாகக் கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இது பா.ஜ.க-வினரின் “டாக்டர்டு வீடியோ”  என்றும், தங்கள் கட்சித் தொண்டர்களைக் களங்கப்படுத்தத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்றும் திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க தரப்போ, “திரிணாமுல் காங்கிரஸ் எப்போதுமே பொய் வழக்குகளை உருவாக்குவதிலும், இது போன்ற போலி நாடகங்களை ஆடுவதிலும் கைதேர்ந்தவர்கள்” என்று விமர்சித்துள்ளது. மேலும் இந்த விசித்திரமான மோதல் குறித்து உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.