“சிங்கம் என்றும் சிங்கம்தான், அதன் வேட்டை குணம் ஒருபோதும் மாறாது” என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லப் பிராணி போல வளர்க்கப்பட்டாலும், வனவிலங்குகளின் ஆக்ரோஷம் எந்த நேரத்திலும் வெளிப்படும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிங்கம் படிக்கட்டுகளில் அமைதியாக அமர்ந்திருக்கிறது. அப்போது அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்து, அதனை விளையாட்டிற்கு அழைக்கிறார். சிங்கமும் மெதுவாக அவர் அருகே வருகிறது. ஏதோ விளையாடப் போகிறது என்று அந்த நபர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அடுத்த நொடியே அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.

 

திடீரென அந்த நபர் மீது பாய்ந்த சிங்கம், அவரது கழுத்தைப் பலமாகப் பற்றியது. சிங்கத்தின் கூர்மையான பற்கள் அவரது கழுத்தில் இறங்கத் தொடங்கியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறினர். அந்த நபர் சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மற்றொரு நபர் (சிங்கத்தைப் பராமரிப்பவர் எனத் தெரிகிறது), சிங்கத்தின் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அந்த அதிர்ச்சியில் சிங்கம் பிடியைத் தளர்த்தியதும், பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்தார்.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 35 விநாடி வீடியோ, வெளியான சில நாட்களிலேயே 50 லட்சம் (5 Million) பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்: “சிங்கம் சிறு வயதிலிருந்தே வீட்டில் வளர்க்கப்பட்டாலும், அதன் வேட்டை குணம் ரத்தத்திலேயே ஊறியது” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“வனவிலங்குகள் ஒருபோதும் செல்லப்பிராணிகள் ஆக முடியாது. அவற்றின் பலமும் குணமும் கணிக்க முடியாதவை” என மற்றொருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம், ஆபத்தான வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.