தமிழகத்தில் நேற்று பெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்பதால் மணிக்கு 95 கிலோ மீட்டர் சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் மணிக்கு 40 கிலோமீட்டர் காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை ஏர்போர்ட்டில் 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது புனே, மும்பை, மஸ்கட் மற்றும் குவைத் போன்ற பகுதிகளில் இருந்து வந்த 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஏர்போர்ட்டில் தரை இறங்கலாமா அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு ஏதாவது விமான நிலையங்களில் தரையிறக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.