கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் பலியாகி உள்ளார்.  இந்த சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமான உடலை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையில் உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் அதிக அளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில், பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு பெரும்பாலானோர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் தான் வசித்து வருகின்றனர். அருகிலேயே காட்டுப் பகுதிகள் உள்ளதால், யானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் பெரும்பாலும் தோன்றும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகளான 4 வயது ரோஷிணி, குடியிருப்பு அருகே தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து, சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

சிறுமியின் தாயார் அலறிய சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஓடி வந்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரும் விரைந்து வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தேடுதல் பணிகள் சிரமமானதாக இருந்த போதும், பல மணி நேரம் கழித்து சிறுமியின் மண்டை ஓடு மட்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குடும்பம் மற்றும்  அல்லாமல், குடியிருப்புப் பகுதிக்கே  பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை போன்ற எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் வருவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல மாடுகள், நாய்கள் போன்றவை சிறுத்தைகளால் பிடிக்கப்பட்ட சம்பவங்கள் பலவாகும். இப்போது குழந்தையின் உயிருக்கு நேர்ந்த இழப்பு மிகவும் மனதை வேதனைப்படுத்துகிறது.

வனத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் .. இந்த அச்சுறுத்தலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் வலியுறுத்தும் கோரிக்கையாக இருக்கிறது.