முதல்வர் மு.க ஸ்டாலின் மே நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் மே நாள் வாழ்த்து செய்தி :

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாக திகழும் தொழிலாள தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபடும் இயக்கம் என்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கு அறியும்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி இருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போது, அவர்களுக்கான உரிமைகளை பேணும் திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறோம்.

மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை, தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ், ஊக்கத்தொகை, நிலமற்ற ஏழை வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம், வேளாண் கூலிகளாகவும், வேறு பல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை, எளிய கருவுற்ற பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி, தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உழைப்பாளர்களின் உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம், குடிசைகளில்லா கிராமங்கள், குடிசை பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழ்நாடு காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என பல்வேறு முத்தான திட்டங்களை உழைக்கும் சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றியது திமுக ஆட்சி தான் என்பது வெள்ளிடை மலை.

அந்த உறுதிப்பாடு குலையாமல் தொழிலாளர் நலன் காக்க திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அரசும் என்றென்றும் பாடுபடும் என்பதை இந்த நன்னாளில் தெரிவித்து, உழைக்கும் தோழர்கள் அனைவரும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.