
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகரித்துள்ளார். அதன் அடிப்படையில் 85க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் மூடும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிய அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்கள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் அரசு பள்ளிகள் மட்டுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை. இப்படியான நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் பள்ளிகளை மூடுவதாகவும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதாகவும் அதிகாரிகள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் திமுகவின் ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காமல் மடைமாற்றம் செய்வதால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனவே விளிம்பு நிலை மக்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் விபரீதத்தை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.