ஸ்பெயினின் கிஜோன் (Gijón) நகரில் நடந்த விமானக் கண்காட்சி நிகழ்ச்சியின் போது, ஸ்பானிஷ் விமானப்படைக்கு சொந்தமான EF-18 ஹார்னெட் போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

நிகழ்ச்சி நடந்த கிஜோன் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் காண வந்திருந்தனர். விமானத்தின் மீது பறவை மோதியதால், விமானம் கீழே விழத் தொடங்கியது. இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த நேரத்தில் திடீரென விமானம் கீழே வீழ்ந்தது போன்று தோன்றிய நிலையில், பார்வையாளர்களிடம் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் விமானியின் நேர்த்தியான முடிவெடுப்பால் விமானம் மீண்டும் மேலெழுந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. ஸ்பெயின் விமானப்படையினர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, “பறவையொன்று விமானத்தின் மீது மோதியது. வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி விமானி விமானத்தை மீட்டார்” என தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விமானத்தில் இருந்து புகை எழுந்ததையும், விமானம் தரையை நோக்கி வந்ததையும் காணொளியில் தெளிவாக காண முடிகிறது. விமானி கடைசி தருணத்தில் மீண்டும் விமானத்தை மேலெழுப்பி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பாதுகாத்துள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விமான விழாக்கள் போன்ற இடங்களில், பறவைகள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக விமான துறை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். EF-18 விமானியின் துணிவும், புத்திசாலித்தனமும் உலக அளவில் பாராட்டை பெறுகிறது.