
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காவது நாள் விவாதம் நடைபெற்ற போது அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் அதனை மாற்றி தர விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மின்மாற்றி பழுது செய்ய விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோரிடமிருந்து பணம் வசூலித்தால் மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து வானூர் தொகுதியில் பேரிடர்களின் போது புயலால் மின்கம்பங்கள் சாய்ந்து பாதிப்படைகிறது. எனவே மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நகராட்சி, பேரூராட்சி என தேவைப்படும் இடங்களில் புதைவட கம்பிகள் பதிக்கப்படும். வானூர் தொகுதியிலும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.